top of page

வங்கிக்காக எவ்வளவுதான் உழைத்தாலும், வங்கியின் நலனுக்காக எவ்வளவு அர்ப்பணிப்போடு செயல்பட்டாலும், நிர்வ


தோழர்களே!

வணக்கம்.

30.11.2018 !

தொழிற்சங்க இயக்கத்தில் மறக்கக் கூடாத, மறக்க முடியாத நாள்.

நிர்வாகத்தின் ஊழியர் விரோத, தொழிற்சங்க விரோத முகம் அப்பட்டமாக வெளிப்பட்ட நாளாக, நேற்றைய தினம் அமைந்திருந்தது.

தோழர் சாமுவேல் ஜோதிக்குமார் பணி ஓய்வு பெற இருந்த கடைசி நாட்களில் ஒரு சார்ஜ் ஷீட், இரண்டு explanation letterகள் நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த உள் நோக்கங்கள் குறித்தும், நிர்வாகத்தின் நேர்மையற்ற நடவடிக்கைகள் குறித்தும் நம் தோழர்களுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தி இருந்தோம்.

நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட அனைத்து பேப்பர்களுக்கும் முறையான, நேர்மையான பதில்கள் நம் தரப்பில் கொடுக்கப்பட்டு இருந்தன. தலைமையலுவலகத்திலிருந்த அனைத்து அலுவலர்களும், முதன்மை மேலாளர்களும் கூட தோழர் சாமுவேல் ஜோதிக்குமாரின் மீது எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கை சரியல்ல என்றே கருத்து கொண்டிருந்தனர். ஒழுங்கு நடவடிக்கைகளை சுமூகமாக முடித்து, தோழர் சாமுவேல் ஜோதிக்குமாருக்கு இயல்பான பணி ஓய்வு கொடுப்பதாக 29.11.2018 மாலையில் நிர்வாகம் நம்மிடம் உறுதியளித்தது.

ஆனால் 30.11.2018 காலை வேறுவிதமாக இருந்தது. பழங்காநத்தம் கிளையில் அவரது சேமிப்புக் கணக்கில் அதிகமான தொகைகளில் நடந்த Transactionகள் சம்பந்தப்பட்ட Explanation-க்குரிய பதிலை ஒப்புக்கொள்ளாமல், சாமுவேல் ஜோதிக்குமாருக்கு இன்னொரு சார்ஜ் ஷீட்டை கடைசி நாளில், 30.11.2018 அன்று கொடுப்பதற்கான நடவடிக்கைகளை நிர்வாகம் செய்து கொண்டிருந்தது.

விஷயத்தை கேள்விப்பட்டு, நாம் பொது மேலாளரை சந்தித்துப் பேசினோம். இது மோசமான முன்னுதாரணமாகி விடும் என்றும், இதன் தொடர்ச்சியாக ஏற்படும் பின் விளைவுகள் வங்கியைப் பாதிக்கும் என்றும், பணி ஓய்வின் கடைசி நாளில் நிர்வாகம் இந்த பெரும் தவறைச் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டோம். ஆனாலும் நிர்வாகம் தன்னை சரி செய்துகொள்வதாய் தெரியவில்லை.

நாம் சேர்மனை சந்தித்துப் பேசினோம். நிர்வாகத்தின் மீது எந்தத் தவறும் இல்லை எனவும், வந்த புகார்களுக்குரிய நடவடிக்கைகளைத்தான் நடைமுறை விதிகளின் படி நிர்வாகம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இப்படி மாறி மாறி புகார்கள் வந்தால் அவை அனைத்தின் மீதும் தாங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா என கேட்டோம். கேட்கப்பட்ட explanationக்குரிய பதில் அளிக்கப்பட்ட பின், அதனை சுமூகமாக முடிக்காமல், சார்ஜ் ஷீட் வழங்குவது என்ன நியாயம் எனவும் கேட்டோம். இனி நாங்களும் எங்கள் பணிகள் அனைத்தையும் விதிகளின் படியும், Book of instructionகள் பிரகாரமுமே செய்கிறோம், வங்கியின் நிலைமை என்னவாகிறது என்று பார்ப்போம் என்றோம்.

வங்கியின் வணிகத்தை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும், அதுபோன்ற வார்த்தைகளை சங்கங்கள் சொல்லக் கூடாது என்றும் நிர்வாகத்தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

வங்கியின் வணிகத்திலும், வளர்ச்சியிலும் அக்கறை காட்டிய தோழர் சாமுவேல் ஜோதிக்குமார் மீது, எடுக்கப்படும் நிர்வாகத்தின் ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகள்தான் வங்கியின் வணிகத்தை எதிர்காலத்தில் பாதிக்கப் போகிறது, அதற்கு நாங்கள் பொறுப்பல்ல எனவும் தெளிவு படுத்தினோம்.

தொடர்ந்த வாதங்களுக்குப் பிறகு, சேர்மனும், பொது மேலாளர்களும் விவாதித்து, தோழர் சாமுவேல் ஜோதிக்குமாருக்கு censure வழங்கி, பிரச்சினையை முடித்துக்கொள்ள தீர்மானித்தார்கள்.

இரவு 9 மணிக்கு, தோழர் சாமுவேல் ஜோதிக்குமாருக்கு Final order வழங்கப்பட்டு, வங்கிப்பணியிலிருந்து அவர் ஓய்வு பெறும் கடிதமும், ஓய்வுக்கால சலுகைகளும் வழங்கப்பட்டன.

33 வருடங்கள் இந்த வங்கிக்காக உழைத்து, மேலாளராக பணிபுரிந்த அத்தனை கிளைகளிலும் அற்புதமாக perform செய்து, இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களோடு இணக்கமான பிணைப்பை ஏற்படுத்தி, கோடிக்கணக்கில் வங்கிக்கு லாபம் ஈட்டித் தந்த தோழர் சாமுவேல் ஜோதிக்குமார், வங்கிப்பணியில் தனது கடைசி கையெழுத்தை, அந்த Final Oder-ஐப் பெறுவதற்காக இட்டார். அது அவருக்கும், சூழ்ந்திருந்த அனைத்துத் தோழர்களுக்கும் வலி மிகுந்த தருணம்.

30.11.2018 மாலை 5 மணிக்கு அவர் ஓய்வு பெறும் அந்த கடைசி நிமிடங்களில் ஆரவாரமும், குதூகலமும், பணிபுரிந்த வங்கி குறித்த மகத்தான நினைவுகளும் நிறைந்திருக்க வேண்டிய நிலைமையை நிர்வாகம் சூறையாடி விட்டிருந்தது.

நிர்வாகத்தின் குணமும், இயல்பும் வெளிப்பட்ட இடமும் அதுவாகத்தான் இருந்தது. தன் உற்ற தோழனை பாதிப்புகள் இல்லாமல் ஓய்வு பெற வைக்க வேண்டும் என வேகம் கொண்டு திரண்ட தோழர்களிடம் தொழிற்சங்கத்தின் குணமும், இயல்பும் வெளிப்பட்ட இடமும் அதுவாகவே இருந்தது.

தோழர் சாமுவேல் ஜோதிக்குமாரின் வங்கிப் பணியும், தொழிற்சங்கப்பணியும் தந்திருக்கும் அனுபவத்திலிருந்து நாம் ஆரம்பிக்க வேண்டிய பயணத்தை, அவர் ஓய்வு பெற்ற 30.11.2018 நமக்கு உணர்த்தி இருக்கிறது.

வங்கிக்காக எவ்வளவுதான் உழைத்தாலும், வங்கியின் நலனுக்காக எவ்வளவு அர்ப்பணிப்போடு செயல்பட்டாலும், நிர்வாகம் அதனை மதிப்பதில்லை என்பது தோழர்.சாமுவேல் ஜோதிக்குமாரின் ஓய்வுநாள் நமக்கு தெளிவுபடுத்தி இருக்கும் பாடம். இந்தச் செய்தியை நாம் இந்த வங்கியில் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது.

இந்த நிர்வாகம் தன்னை நல்லவன் போல காட்டிக்கொண்டு, நம்மைப் பிரித்தாளும் சூழ்ச்சியை மிகத் திறம்படச் செய்து வருகிறது. நாம் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு சாக வேண்டும், நிர்வாகம் அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டும், அவ்வப்போது ‘உச்’ கொட்டி தனது பரந்த இதயத்தை காட்டிக்கொண்டும் இருக்கிறது.

கடந்த கால் நூற்றாண்டாக, வெவ்வேறு சங்கங்களாக நம்மிடையே இருந்த பேதங்கள் அகன்று நாம் இன்று ஒன்றுபட்டு, மிகுந்த வலிமையோடு இருப்பதை பொறுக்க முடியாமல் அதனைத் நிர்வாகம் தகர்ப்பதற்கு தந்திரமாக காய்களை நகர்த்தி வருகிறது.

”இனி ஒரு விதி செய்வோம்.

அதை எந்நாளும் காப்போம்.

நிர்வாகத்தின் சதிகளை முறியடித்து,

தொழிலாளர்களாகிய நாம்

ஒற்றுமையால் திரண்டு எழுவோம்.”

இதுதான் தோழர் சாமுவேல் ஜோதிக்குமார் ஓய்வு பெற்ற நாளில் நாம் எடுக்க வேண்டிய சபதம்.

அதே வேளையில் தோழர் சாமுவேல் ஜோதிக்குமாரின் சந்தோஷங்களை மட்டுமல்ல, சோதனைகளையும் பகிர்ந்து கொள்வதற்கும் தொழிற்சங்கமே அங்கு நின்றிருந்தது. ஜாதி, மதம் என எந்த வித்தியாசமும் இல்லாமல் தோழர்கள் வந்திருந்தனர். அதுதான் தொழிற்சங்கம்.

சாமுவேல் ஜோதிக்குமாருக்குத்தான் சார்ஜ் ஷீட் கொடுத்தோம். "Final Order வாங்குவதற்கு அவர் மட்டும் வந்தால் போதாதா…. இத்தனை பேர வர வேண்டுமா?” என ஒரு பொது மேலாளர் கேட்டார். “சாமுவேல் ஜோதிக்குமாருக்கு கொடுக்கப்பட்ட சார்ஜ் ஷீட், எங்களுக்கும் கொடுத்த சார்ஜ் ஷீட்தான். அதுதான் எல்லோரும் வந்திருக்கிறோம்” என்றார் ஒரு தோழர். அதுதான் தொழிற்சங்கம்.

30.11.2018 மாலையில், 40-ற்கும் மேற்பட்ட தோழர்களும், சங்கத் தலைவர்களோடும் தோழர் சாமுவேல் ஜோதிக்குமாரோடு தலைமையலுவலகத்தில் இருந்தனர். “நான் சம்பாதித்தது இவர்களைத்தான். இந்த அன்பைத்தான், இந்த தோழமையைத்தான், இது தெரியாமல் நிர்வாகம் என் சேமிப்புக்கணக்கைப் போய் சோதனை செய்து கொண்டு இருக்கிறது” என்று தோழர் சாமுவேல் ஜோதிக்குமார் தழுதழுத்துச் சொன்னது எவ்வளவு உண்மை! அதுதான் தொழிற்சங்கம்.

தோழர் சாமுவேல் ஜோதிக்குமார் மீது வீசப்பட்ட அத்தனை அவதூறுகளையும், தொடுக்கப்பட்ட அத்தனை தாக்குதல்களையும் எதிர்கொண்டு அரணாக நின்றனர். அதுதான் தொழிற்சங்கம்.

இறுதியாக வெற்றி பெற்றோம். அதுதான் தொழிற்சங்கம்.


Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.
world-spin-crop.gif

© 2024 | Tamil Nadu Grama Bank Officers Association

bottom of page