தோழர்களே
22.08.2019 அன்று புதிதாக பணியமர்த்தப்பட இருக்கும் scale 2 அலுவலர்களுக்கான இரண்டு நாள் பயிற்சியின் நிறைவு நாளில் அவர்களை நமது சங்கத்திலிருந்து தோழர்கள் அறிவுடைநம்பி, லூர்து ஆரோக்கியராஜ், ஆறுமுகப்பெருமாள், ராஜராஜன், கலைவாணன், ஷரத் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும் அவர்களை நம் சங்க உறுப்பினர்களாக வேண்டினோம். அவர்களும் மகிழ்ச்சியோடு நம்மிடம் உரையாடினார்கள்.
இதனைத்தொடர்ந்து நாம் தலைமை அலுவலகத்திற்கு சென்று சேர்மன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆர்ப்பாட்டத்தை ஒட்டி நாம் வழங்கிய கோரிக்கைகளை தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதாக தெரிவித்தோம். இத்தகைய நடவடிக்கைகள் நமது வங்கியின் தொழில் அமைதி மற்றும் வங்கி வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தோம்.
மேலும் நமது பொதுச் செயலாளரின் இடமாறுதல் குறித்து கேட்டபோது எப்பொழுதும் போல மௌனம் சாதித்தார். நிர்வாகம் பிரச்சனைகளை தள்ளிப் போடுவதாலும் பேச்சுவார்த்தை நடத்த காலதாமத படுத்துவதாலும் எந்த பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்றும் அது மேலும் சிக்கலாய் மாறுமே தவிர முடிவுக்கு வராது என்றும் சேர்மன் அவர்களிடம் தெரிவித்தோம்.
கடும் ஆள் பற்றாக்குறையும் பணிச்சுமையும் இருக்கும் இந்த சூழ்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் புதிய scale 1 அலுவலர்களை பணியில் சேர்க்காமல் ஏறத்தாழ எட்டு மாதங்கள் இழுத்தடிப்பது சரியல்ல என்றும் நான் சொன்ன பொழுது அவர் வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் நிச்சயமாக அவர்களுக்கான பணிநியமனம் நடக்குமென்று உறுதியளித்தார்.
மேலும் வங்கியில் உள்ள எந்த ஒரு பிரச்சினையா இருந்தாலும் உடனடி தீர்வினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க அவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று எடுத்துரைத்தோம். மண்டல மேலாளர்கள் எதற்கெடுத்தாலும் சேர்மன் சொன்னார்கள் என்று சொல்லியே அலுவலர்களையும் பணியாளர்களையும் உருட்டியும் மிரட்டியும் வருவதை நாம் கண்டிப்பதாகவும் அத்தகைய நிகழ்வுகள் எதிர்காலத்தில் தொடரக்கூடாது என்றும் தெரிவித்தோம்.
மிக முக்கியமாக நமது பணியாளர்களின் வீட்டுக் கடன் விண்ணப்பங்கள் தலைமை அலுவலகத்தில் தேங்கிக் கிடப்பது கவலை அளிப்பதாகவும் அதனை விரைந்து முடித்து sanction செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டோம், அதனையும் விரைந்து முடித்து அனுப்பி விடுவதாக தெரிவித்தார்.
இந்த நிர்வாகம் எப்பொழுதும் போல நம் கேள்விகளுக்கு பதில்களை வழங்குகிறது. ஆனால் கோரிக்கைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. யார் முடிவெடுக்க வேண்டும் என்ற குழப்பம் அவர்களிடையே இருப்பதால் அலுவலர்களும் ஊழியர்களும் தான் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். இத்தகைய போக்கு வங்கியின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். வணிகம் பற்றி கவலைப்படும் நிர்வாகம் அது இங்கு பணிபுரிபவர்களின் கையில் தான் உள்ளது என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறது. நமது சங்கமும் கோரிக்கைகளை அடையும்வரை விடுவதாயில்லை இணைவோம் போராடுவோம் வென்றெடுப்போம்.
அறிவுடைநம்பி
பொதுச் செயலாளர்
TNGBOA
Comments